உண்மையான பலசாலி யாரெனில் தன்
வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே
"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்" என்பதெல்லாம் கோபத்தினால்
ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்.
கோபம் ஏன் ஏற்படுகின்றது?
கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல
விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது. நாம்
சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது...
நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள்
உடனே நிவர்த்தி செய்யாத போது... நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று
பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது...
எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத
போது ...இப்படியே பல காரணங்கள் உள்ளன. ஒருவன் மற்றொருவனைப் பார்த்து
"கழுதை" என்று திட்டும்போது அவன் "குரங்கு" என்று பதிலுக்குத்
திட்டினால், அந்தச் செயல்தான் கோபம் ஆகும்.
ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம்.
அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு
கோபமாகும்.
கோபம் தன்னையே அழித்து விடும்
மனிதத்துவம் என்பது சமூகத்துடன்
ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து - பாராட்டி - உதவி செய்து
வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும். ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத
இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.
கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன.
சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி
இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின்
விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவற்றுள்... வாழ்வின் சந்தோசத்தை பறித்து
விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்) திருமணம் மற்றுமுள்ள
தொடர்புகளை அழித்து விடும்.
தொழிலை முடக்கி விடும். காரணம்
தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது. மன இறுக்கத்தை ஏற்படுத்தி இருதய
வியாதிக்கு வழிவகுக்கும். முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை
தவறானதாக்கி விடுகின்றது....கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து
விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள.
55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு
உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது. கோபமானது இதய ரத்த நாளங்களை
கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது
மாரடைப்பில் விட்டு விடும். இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும்
கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான். மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம்
காரணமாக அமைவதுண்டு என சில மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட
வேண்டியது முக்கியம். கோபத்தைக் கட்டுப்படுத்துதல்: கோபம் வரும்போது குறிப்பிட்ட
மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள்
தோன்றுகின்றன.
கோபத்தை குறைக்க சில வழிகள்:
1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள்.
மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை
சிந்தியுங்கள். 2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே
உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள். 3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள் 4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை
கடைப்பிடியுங்கள். 5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள். 6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மௌனமாக
இருங்கள். ஒருமுறை இவைகளை கடைபிடித்துப் பாருங்கள்....
கோபம் பற்றி அல்லாஹ்வின் தூதர்
சொன்னது என்ன தெரியுமா?
சுலைமான் இப்னு ஸுரத்(ரலி)
அறிவித்தார்:
நபி(ஸல்) அவர்கள் அருகில்
இரண்டு பேர் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது நாங்கள் நபி(ஸல்) அவர்கள்
அருகில் அமர்ந்துகொண்டிருந்தோம். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்து விட்டிருக்கக் கோபத்துடன்
தம் தோழரைத் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'எனக்கு ஒரு (பிரார்த்தனை)
வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும். 'அ¥து பில்லாஹி மினஷ்
ஷைத்தானிர் ரஜீம்' (சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து
அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்பதே அச்சொல்லாகும்''என்று கூறினார்கள்.
எனவே, மக்கள் அம்மனிதரிடம், நபி(ஸல்) அவர்கள்
சொல்வதை நீர் செவியேற்கவில்லையா? என்று கூறினார். அதற்கு அந்த மனிதர், 'நான் பைத்தியக்காரன்
அல்லன்'' என்றார். (புகாரி 6115-6048-3282)
அவர்கள் கூறினார்கள்: கோபம் ஷைத்தானிடமிருந்துள்ளது. ஷைத்தான் நெருப்பால்
படைக்கப்பட்டுள்ளான். நெருப்பு தண்ணீரால்தான் அணைக்கப்படும். எனவே உங்களில் ஒருவருக்குக்
கோபம் வந்தால் அவர் உளுச் செய்யட்டும்.(அபூதாவூத்,அஹ்மத்)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்
எங்களிடம், உங்களில் ஒருவருக்கு
அவர் நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து விடட்டும். கோபம்
அகன்றுவிட்டால் சரி. இல்லாவிடில் அவர் படுத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்கள். (அஹ்மத்)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை எச்சரிக்கிறேன்! ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்)
துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள்.
கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே!
(அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.(புகாரி 6064-6066-5143-6724)
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள்.
(மாறாக,)அல்லாஹ்வின் அடியார்களே!(அன்பு
பாராட்டுவதில்)சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு
மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.(புகாரி 6065-முஸ்லிம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக